டிரெண்டிங்

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை உண்டா? பொன்.ராதா பதில்!

webteam

பெரியார் சிலை சர்ச்சை குறித்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் விளக்கம் ஏற்புடையதல்ல என்று மத்திய
இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜாவின் சிலையை உடைப்பது குறித்து தான் முகநூலில் பதிவு செய்யவில்லை என்றும், அதை தனது முகநூல் பொறுப்பாளர் பதிவிட்டதாகவும் இன்று ஹெச்.ராஜா கூறினார். மேலும் அந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார். இதற்கிடையே நேற்றிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இன்று டெல்லியில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கடந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கக்கூடிய
விஷயங்கள் வேதனை அளிக்கிறது. திரிபுராவில் நடந்த சிலை அகற்றும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பெரியார் சிலைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அவமானம், இதையெல்லாம் பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளப் பூர்வமாக வேதனை அடைகிறோம். இந்தச் செயல்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாஜக-வால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை பிரதமரும், பாஜகத் தலைவர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான நிலையில், எவருடைய சிலையை யார் அவமானப்படுத்தினாலும் அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. அது பாஜகவின் நிலைப்பாடும் இல்லை. அவ்வாறு செயல்படுபவர்கள் பாஜகவிற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை, அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்துள்ளார். இதை விளக்கத்தோடு விட வேண்டும். அவ்வளவு தான். பெரியார் சிலை அவமானப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். ஹெச்.ராஜா மீது என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை கட்சி முடிவு செய்யும். ஹெச்.ராஜாவின் விளக்கம் காலதாமதமானது தான். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று கூறினார்.