கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் தெருவில் சுற்றித் திரிந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இவரை 40 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் இவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருவில் நடமாடியுள்ளார். தெருவில் உள்ள கடைக்குச் சென்று சுற்றி திரிந்து வந்துள்ளார். இதனால் அந்த இளைஞர் குறித்து அக்கம்பக்கத்தினர் சிலர் சுகாதார துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சுகாதாரத் துறை அதிகாரி விசாரணை நடத்திய போது வாலிபர் நோயை பரப்பும் வகையில் வெளியே சுற்றியது தெரியவந்தது. இதனால் சுகாதாரத் துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரவை மீறியதற்காக தொற்று நோய் தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது