டிரெண்டிங்

விஷ வண்டுகள் கடித்து விவசாயி உயிரிழப்பு : புதுக்கோட்டையில் சோகம்..!

webteam

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தோட்டத்திற்கு சென்ற விவசாயி விஷ வண்டுகள் கடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (71). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு நெடுவாசல் வடக்கு கிராமத்தில் உள்ளது. இன்று அவரது தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணி நடைபெற்றபோது, மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுள் திடீரென கூட்டமாக கிளம்பின. அவை அங்கிருந்த ஆறுமுகத்தை கடித்துள்ளன. கதண்டுகளிடம் இருந்து தப்பிக்க அவர் அங்கும், இங்கும் ஓடினார்.

ஆனால், 30க்கும் மேற்பட்ட வண்டுகள் அவரை கடித்தன. மேலும் அங்கே தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும் கதண்டு கடித்ததால் அவர்களும் அங்கிருந்து சிதறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் உடனே அங்கு வந்து ஆறுமுகத்தை காப்பாற்றி பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆறுமுகத்துடன் சேர்ந்து கதண்டுகளிடம் கடிபட்ட தொழிலாளர்கள் ஆறு பேர் தற்போது நெடுவாசல் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விவசாயி கதண்டு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கதண்டுகளை விரட்ட நெடுவாசல் கிராம மக்கள் சார்பில் கீரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.