2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். பொதுமக்களும், வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைக்குமாறும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.