திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியை கடந்து செல்ல அரசுப் பேருந்துக்கு செலுத்த வேண்டிய சுங்கவரி கட்டணத்தை பேருந்து நடத்துநர் கட்ட மறுத்ததால் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகளே சுங்கவரி கட்டணம் ரூ.55 செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் சுங்கச் சாவடியை கடந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து பயணிகளுடன் சென்றது. அப்போது சமயபுரம் சுங்கசாவடியை கடக்க முயன்ற போது, சுங்கக் கட்டணம் செலுத்த அரசுப்பேருந்து நடத்துனர் மறுத்துள்ளார்.
அதாவது போக்குவரத்து கழக அலுவலத்திருந்து மாதா மாதம் கட்டணமாக காசோலையை செலுத்திவிடும் நிலையில் இன்று மட்டும் என்னிடம் சுங்கக் கட்டணம் கேட்டால் நான் எப்படி செலுத்த முடியுமென கூறி சுங்கசாவடியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநரும் நடத்துனரும் சுங்கசாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் திருச்சி செல்வதற்கு காலதாமதமானதால், சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 55 பயணிகளே செலுத்தினர். பணம் செலுத்தியதும் அரசுப் பேருந்து சுங்கசாவடியைக் கடந்து சென்றது. இது குறித்து சுங்கசாவடி அதிகாரிடம் கேட்ட போது, சுங்கச்சாவடிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் காசோலையாக செலுத்தி வந்தனர். இன்று மாதத்தின் முதல்நாள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாததால், பேருந்தை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பயணிகள் அதற்கான கட்டணத்தை செலுத்தியதால், பிரச்னை சுமூகமாக முடிந்தது என்றனர்.