டிரெண்டிங்

ஓபிஎஸை நம்பி ஏமாந்துவிட்டேன்... தினகரன் அணியில் சாய்ந்த பரிதி சாடல்!

webteam

ஓபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார்.

சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் ஒரு மிகச்சிறந்த நடிகர். பன்னீர்செல்வத்தின் நடிப்பை நம்பி நான் ஏமாந்துவிட்டேன். அதிமுகவை வழிநடத்த டிடிவி தினகரனே சரியான தலைவர். ஓபிஎஸின் சாயம் வெளுப்பதால் இனிவரும் காலங்களில் அவரது அணியைச் சேர்ந்த மேலும் சிலர், டிடிவி தினகரனைச் சந்திப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஓபிஎஸ் அணியில் ஐக்கியமானார் பரிதி. சில தினங்களுக்கு முன் அதிமுக அம்மா அணியைச்சேர்ந்த பலர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அணியில் இருப்பவர்களை தினகரன் அணிக்கு இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரிதி இளம்வழுதி தினரகனுக்கு ஆதரவு தெரிவித்து ஓபிஎஸை சாடியுள்ளார்.

திமுகவில் முக்கியப்புள்ளியாக முன்பு வலம்வந்த பரிதி அக்கட்சி சார்பாக 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி. சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.  செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அப்போது திமுக தலைவர் கருணாநிதியால், இந்திரஜித் என்றும், வீர அபிமன்யூ என்றும் புகழாரம் சூட்டப்பட்டவர்.