டிரெண்டிங்

“என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி

“என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி

rajakannan

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு நேற்று வந்தனர். ஆனால், சிதம்பரம் அங்கு இல்லை. சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டை சுற்றியே முகாமிட்டிருந்ததால் அவரைக்  கைது செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. பின்னர், சிதம்பரத்திற்கு எதிராக இன்று லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய ப.சிதம்பரம், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என் பெயர் கூட இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. ஜனநாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். சுதந்திரத்தை பெறவும் போராடினோம். சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம். பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 7 மாதங்களுக்கு பின் எனது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது” என்றார்.  

இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.