நம்பிக்கை வாக்கெடுப்பே எங்கள் நோக்கம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக்கோரி கடிதம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன், "அதிமுக அம்மா அணியை சேர்ந்த 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநரை சந்தித்துவிட்டு முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கடிதத்தை அளித்துள்ளோம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா மட்டும் இல்லையென்றால் இப்போதைய அரசு கிடையாது. 132 எம்எல்ஏ-க்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய இடத்தில், ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்து அன்று திமுக-விற்கு ஓட்டுபோட்டார். நாங்கள் 122 எம்எல்ஏ-க்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சட்டமன்றத்தில் 6 மணி நேர பசியோடு சசிகலா சொன்னதற்காக ஓட்டு போட்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினோம்." என்றார்.
"தமிழக அரசில் ஊழல் நடைபெறுவதாக கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்த்து வாக்களித்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைத்தார். அப்படிப்பட்ட ஓபிஎஸ்-ஸின் காலில் விழுந்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிமுக அரசு ஊழல் அரசு.. ஆகஸ்ட் 15-ல் கோட்டை முன் உண்ணாவிரதம் இருப்பேன் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்திற்கு இப்போது மட்டும், இது எப்படி நல்லரசாக மாறியது. தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள். சசிகலாவை நீக்க முடிவெடுத்தது தான் வேதனையாகவுள்ளது. அரசு நிலைத்திருக்க வேண்டும் என சசிகலா நினைத்தார். அவரை போய் விலக்கி வைக்க முடிவெடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பே எங்கள் நோக்கம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் நிச்சயம் புது முதலமைச்சர் தான் வருவார்" என தெரிவித்தார்.