மயிலாடுதுறையில் 38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக உழைத்த முதியவர் வீட்டிலிருந்து விரட்டப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாகராஜன். இவருக்குக் குமரி என்ற மனைவியும், இரண்டும் மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேளை பார்த்துவந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாகச் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றித்தர மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் சொத்துக்களை எழுதித்தர நாகராஜன் மறுக்க, அவரை வீட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.