டிரெண்டிங்

எதையும் திருட முடியவில்லை - இறுதியில் சிசிடிவி கேமராவை எடுத்துச்சென்ற நபர்..!

எதையும் திருட முடியவில்லை - இறுதியில் சிசிடிவி கேமராவை எடுத்துச்சென்ற நபர்..!

webteam

தஞ்சை பர்மா பஜாரில் உள்ள மொபைல் கடை ஒன்றில் திருட முயற்சித்த முதியவர் எதுவும் கிடைக்காததால் இறுதியில் சிசிடிவி கேமராவை கழட்டிச்சென்றார்.

தஞ்சை மாவட்டம் பர்மா பஜாரில் மொபைல் கடை வைத்துள்ளவர் அசார். இவர் நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வழக்கம் போல் வீடு திரும்பி உள்ளார். காலை 10 மணி அளவில் கடை திறக்க வந்தபோது, கடைக்கு வெளியே இருந்த 2 சிசிடிவி கேமராவில் ஒன்றை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தார். கடையில் உள்ள பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கருதி பதறிப்போய் அவர் கடையை திறந்து பார்க்க, உள்ளே எதுவும் திருடப்படவில்லை.

இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் முதியவரான ஒருவர், தொப்பி அணிந்தபடி கடையை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கடை திறக்க முடியவில்லை. இதையடுத்து இறுதியாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அவர் கழட்டிச் சென்றுள்ளார்.

தான் திருட முயன்றதை சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்துவிடுமோ என்ற நோக்கத்தில் அவர் அதை திருடிச் சென்றாரா ? அல்லது இந்த சிசிடிவி கேமராவையாவது திருடிச் சென்று விற்கலாம் என்று கழட்டிச் சென்றாரா ? என்பது அவரை கைது செய்தால் மட்டுமே தெரியவரும். இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், தஞ்சை கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.