அ.தி.மு.க.வை பா.ஜனதா இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது என்று முரளிதரராவ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது அலுவல் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அவரது தமிழகம் வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார். மேலும் அமித்ஷா வருகையின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு நடைபெறுமா? என்ற கேள்விக்கு, அதுகுறித்த எந்த தகவலும் இல்லை என்றும் முரளிதரராவ் கூறினார். மேலும் பேசிய அவர், அ.தி.மு.க.வை பா.ஜனதா இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை என்றும், அது முட்டாள்தனமான கருத்து என்றும் கூறினார்.
"தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மாநிலத்திலும், மாநில கட்சிகளின் உள் பிரச்சினையில் பா.ஜனதா தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும், அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது என்பது அவர்களது தொண்டர்களின் விருப்பம். இணைந்தால் வெற்றியே. இல்லையென்றால் அவர்களுக்குள் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் பாஜக தலையிடுவதற்கு அவசியமில்லை" என்றும் அவர் கூறினார்.