பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியிலுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தபின் நிர்மலா சீதாராமன் தனது பொறுப்பினை ஏற்றார். அப்போது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடனிருந்தார். நிர்மலா சீதாராமனிடம் முறைப்படி பாதுகாப்புத்துறை பதவியை ஜெட்லி ஒப்படைத்தார். முன்னதாக, பாதுகாப்புத்துறை சார்பில் ஜப்பானில் நடைபெற்ற மாநாட்டிற்கு அருண்ஜெட்லி சென்றிருந்தார். நேற்று அவர் டெல்லி வந்த நிலையில், இன்று நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பெண் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாகவே இந்திரா காந்தி பாதுகாப்புத் துறையை கையாண்ட நிலையில், நிர்மலா முழுநேர முதலாவது பெண் பாதுகாப்பு அமைச்சராகியுள்ளார்.