மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
இன்று காலை அவை கூடியதும், திமுக எம்.பி கனிமொழி பேசும்போது, "நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு தேவை என்பதல்ல. தமிழக அரசும், சரி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் சரி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றன" என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி.யான நவநீத கிருஷ்ணன் "நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத வருத்தத்தில் மாணவ, மாணவிகள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் இரண்டு விதமான வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் எளிமையான கேள்வித்தாளை கொண்டு வட மாநிலங்களிலும், கடினமான கேள்வித்தாளை கொண்டு தமிழகத்திலும் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் திணறுகின்றனர். இது மிகவும் பாரபட்சமானது. எனவே மாணவர்களின் நலன் காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரங்கராஜனும், நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் விவகாரத்தில் அனைவரின் கவலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என உறுதியளித்தார்.