டிரெண்டிங்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை

Veeramani

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும், மேற்குவங்கத்தில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அமித் ஷா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியால் மேற்கு வங்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வென்று ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல, அசாமில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அமித் ஷா, தமிழகத்தில் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்றார்.

8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக வருகிற 27 ஆம் தேதி 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதேபோல அசாம் மாநிலத்திலும் மார்ச் 27 ஆம் தேதி முதல்கட்டமாக 47 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.