பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் என நமது அம்மா நாளிதழ் விளக்கம் கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேபோல், தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு மற்ற கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளது. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், “ பிறர் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கென்ன பயன்? 1999 இல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை தீர்மானம் கொண்டுவந்து வீட்டுக்கு அனுப்பியது அதிமுகதான். பாஜக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் அது அதிமுகவால் முடியும். ஆனால் பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல. உச்சநீமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம்” என கூறப்பட்டுள்ளது.