டிரெண்டிங்

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் சென்ற வாலிபர்... தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் சென்ற வாலிபர்... தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

kaleelrahman

பேரையூர் அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம், நான்கு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அனைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பாண்டியம்மாள். இந்த தம்பதிக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாழைத்தோப்பு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த மாதம் இதயக்கனி, அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து அழைத்துச் சென்றுவிட்டார் இந்நிலையில் மைனர் பெண்ணை கடத்தி சென்று விட்டதாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்காக இதயக்கனியின் சகோதரர்கள் சந்தோஷ் மற்றும் ரமேஷை அடிக்கடி அழைத்து சென்று விசாரித்து விட்டு மீண்டும் வீட்டில் விட்டுவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு ரமேஷை விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில், காலைவரை வீட்டிற்கு வராததால் காவல்நிலையத்திற்குச் சென்று கேட்டபோது ரமேஷை அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள மலையில் ரமேஷ் தூக்கில் தொங்கியதை கண்ட உறவினர்கள் ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பாதவும், விசாரணையின் போது போலீசார் ரமேஷை அடித்து கொலை செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி தூக்கில் தொங்கி கொண்டிருக்கும் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட சாப்டூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதியராஜா உள்ளிட்ட நான்கு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், உசிலம்பட்டி கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் உடலை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.