டிரெண்டிங்

ஈரோடு : கண்களில் மிளகாய் பொடி தூவி தண்டனைபெற்ற கொலை குற்றவாளி கொலை

webteam

ஈரோட்டில் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி தண்டனைபெற்ற கொலை குற்றவாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மேற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் மெட்ராஸ் மணி என்கிற மணிகண்டன். இவர் ஏற்கனவே இரண்டு கொலை வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது விடுதலையாகி வீட்டில் இருந்தார். கடந்த ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாததால் மணிகண்டன் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறி தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பவானி போலீசாருக்கு கந்தன் தொழிற்சாலை முன்பு ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது கொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது இறந்தவர் மணிகண்டன் என தெரியவந்தது. அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவி யாரோ கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மணிகண்டன் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? அல்லது சீட்டாட்டத்தில் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.