டிரெண்டிங்

கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

rajakannan

மேட்டூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியதன் கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மேட்டூர் அணை நிரம்பவே நிரம்பாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருப்பதால் தான் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றினாலும் நாங்கள் ஏற்போம். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதன் கண் திருஷ்டி தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ஆளுங்கட்சியை முடக்கி மக்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதிமுகவின் சாதனைகளை மறைக்க சிலர் கட்சி தொடங்கி பொய் பரப்புரை செய்கிறார்கள். ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சிகள் போர்வை, தார்பாய்கொண்டு மூடிமறைக்க பார்க்கிறார்கள்” என்றார்.