டிரெண்டிங்

திருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது

Rasus

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக, அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வில்லாபுரம் சென்ற அதிகாரிகள், வாசுகி தெருவில் அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட வில்லாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், முத்துமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சிவகுமார், ராமசாமி ஆகியோரைப் பிடித்த அதிகாரிகள், அவர்களை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 74 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர்கள் அதிமுகவுக்காக பணப்பட்டுவாடா செய்ததாக காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.