டிரெண்டிங்

“பாசிச எதிர்ப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது” - கமல்ஹாசன்

webteam

பாசிசத்தை எதிர்ப்பது குறித்து மக்கள் சிந்திக்க‌வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்த கமல்ஹாசன், அம்மாநில முதலமைச்சர் பினராயி வி‌ஜயனை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடம் இந்தச் சந்திப்பு நீடித்தது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கர்நாடக விவகாரம் உள்ளிட்டவை‌குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கோவையில் அடுத்த மாதம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்.

அவர் வரும் தேதிக்கு ஏற்ப நிகழ்ச்சிக்கான திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்தார். கர்நாடக விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், கர்நாடகத்தில் தொடங்கி இருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என நான் ஏற்கனவே டிவிட்டரிலும் எழுதி இருந்தேன். பாசிஸ்ட்டுகளாக மாறி வருபவர்களை எப்படி எதிர்கொள்வது என மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது என்றார்.