மே17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வேலூர் சிறையிலிருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அக்டோபர் 2 ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட திருமுருகன் காந்தி, அதில் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிந்த நிலையில், திருமுருகன் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையே ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசிய திருமுருகன் காந்தி விமானம் மூலம் பெங்களூரு வந்து இறங்கிய போது கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 52 நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவந்தார்.
பல்வேறு வழக்குகளில் எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றம் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் சிறையிலிருந்து விடுதலையானார். முன்னதாக திருமுருகன் காந்தி சிறையில் தனிமைப்படுத்தப்பட்டதாக புகார் ஒன்றும் எழுந்தது. சிறையில் அவருக்கு உடல்நிலை மோசமான காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ஸ்டாலின் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.