டிரெண்டிங்

“மக்களை ஒருங்கிணைப்போம்”- தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

Rasus

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, மாநிலத்தில் ஆளும் அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கங்களை முன்வைத்து வரும் 8-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி ஜனவரி 13-ஆம் தேதி முதல் 18 வரை இடைவெளி விட்டு கூட்டங்களை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிதான் இது எனவும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகள் வலிமையாக இருந்தால்தான் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும் என்றும் ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாத அரசாக அதிமுக அரசு இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவின் ஒரே இலக்கு ஆட்சி மாற்றம் என்றும் அதுவே மக்களின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் எனத் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.