அம்மா கொடுத்த அன்பு பரிசுடன் ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. அவரது வெற்றியை நாடே கொண்டாடி வரும் நிலையில், தன் அம்மா அன்பளிப்பாக கொடுத்த ஒலிம்பிக் வளைய வடிவிலான காதணியை அணிந்து கொண்டு களத்தில் இன்று இறங்கி விளையாடி உள்ளார் அவர்.
தங்கத்தினாலான அந்த காதணியை அணிந்திருந்த அவர், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அவர் நான் கொடுத்த காதணியை அணிந்திருப்பதை டிவியில் பார்த்தேன். 2016 ஒலிம்பிக்கின்போது நான் அவளுக்கு கொடுத்தது அது. என்னிடம் இருந்த தங்கம் மற்றும் சேமிப்புகளை கொண்டு வாங்கி அவளுக்கு கொடுத்தேன். அவள் அதை அணிந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. அவள் பதக்கம் வென்ற காட்சிகளை கண்டு எனக்கும், என் கணவருக்கும் கண்கள் கலங்கின” என ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அவரது அம்மா சாய்கோம் ஓங்பி டோம்பி லீமா.