டிரெண்டிங்

கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தினகரனின் வெற்றி: ஜெயக்குமார்

கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தினகரனின் வெற்றி: ஜெயக்குமார்

Rasus

தினகரனின் வெற்றி கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதேசமயம், ஆளும் அதிமுக தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனின் வெற்றி கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “வாழ்க்கை என்றாலே போர்தான். அரசியல் களம் என்பதும் போர்தான். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஏற்பதும், ஏற்காததும் மக்களின் விருப்பம். உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய 2ஜி ஊழல் வழக்கை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால் கனிமொழி, ஆ.ராசா விடுதலையானபோது டிடிவி தினகரன் வாழ்த்து சொன்னது ஒவ்வொரு அதிமுக தொண்டனையும் கேவலப்படுத்திய செயல்” என்றார்.

மேலும், “டிடிவி தினகரன் திமுகவோடு கூட்டு சேர்ந்து செய்த சதியே, எங்களுக்கு பின்னடைவு ஏற்படக் காரணம். மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்து திருமங்கலம் பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக. ஆனால் இன்று ஹவாலா பாணியில் புதிய தொழில்நுட்பத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் இதுபோன்ற விஷயத்தில் வருங்காலத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியே சென்றால், மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும்” என்று கூறினார்.