மின்கோபுரத்திற்கு பதிலாக பூமிக்கடியில் மின் கேபிளை அமைக்க வாய்ப்பில்லை எனவும் 800 கிலோவாட் மின்சாரத்திற்கான கேபிளை பூமிக்கடியில் புதைப்பது சாத்தியமற்றது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பேரவையில் எதிர்கட்சிகளின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்கோபுரத்திற்கு பதிலாக பூமிக்கடியில் மின் கேபிளை அமைக்க வாய்ப்பில்லை எனவும் 800 கிலோவாட் மின்சாரத்திற்கான கேபிளை பூமிக்கடியில் புதைப்பது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் “ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. சத்தீஸ்கரில் இருந்து 4000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 400 கிலோவாட் கேபிளை 41 கி.மீ வரை பூமிக்கடியில் பதிக்கும் திட்டமே இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதைத்தட வழியாக மின்சாரம் கொண்டுசெல்வது இயலாத காரியம். தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அரசியலுக்காகவே உயர்மின் கோபுரம் குறித்து விவசாயிகளிடம் தவறான தகவல் பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். 800 கிலோவாட் மின்சாரத்தை உயர்மின் கோபுரம் வழியாகதான் கொண்டு செல்ல முடியும் என்பதை ஏற்கிறேன். ஆனால் திட்டத்தை இரண்டாக பிரித்து 400 கிலோ வாட் மின்சாரத்தை பூமிக்கடியில் கேபிள் பதித்து கொண்டு செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி அதிகபட்சமாக 350 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லவே கேபிள் உள்ளதாகவும் பூமிக்கடியில் கேபிள் பதிக்க வேண்டுமெனில் திட்ட மதிப்பை விட 10 மடங்கு கூடுதல் செலவாகும் எனவும் தெரிவித்தார்.