ஆர்.கே.நகர் தொகுதியில் இபிஎஸ் - ஓபிஎஸ் பலத்தால் இரட்டை இலை வெற்றி பெறும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளி ஆட்கள் தொகுதிக்குள் தங்கக்கூடாது, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது, ஊடகங்கள் வாயிலாக பரப்புரை வெளியிடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரப்புரைக்கு இறுதி நாளான இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் நிலோஃபர் கபில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஆர்.கே நகர் மக்கள் இரட்டை இலைதான் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்வதாக மக்கள் நினைக்கின்றனர். இரட்டை இலைக்காக இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து வந்து ஓட்டுக் கேட்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இபிஎஸ் - ஓபிஎஸ் பலத்தால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார்.