ஆடிட்டர் குருமூர்த்திக்கு நாவடக்கமும், நிதானமும் தேவை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, தினகரன் ஆதரவாளர்கள் மீது காலங்கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என தெரிவித்துள்ளார். இருவரையும் திராணியற்றவர்கள் என பொருள்படுவதாக கடுமையான சொல் ஒன்றையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. அவர் எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை குறித்து பேசுவார்கள். ஆண்மை உள்ளவர்கள் அதுகுறித்து பேசமாட்டார்கள். இப்படி ஒரு கீழ்தரமான வார்த்தையை அவர் கூறியிருப்பது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று. அதுவும் ஒரு ஆடிட்டர், பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் இத்தகைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் வேண்டுமானால் ஆண்மை அற்றவராக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு அதிமுக தொண்டரும் ஆண்மையுடனும், காங்கேயம் காளையை போலவும் இயக்கத்தை கட்டிக்காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? அவர் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவரா? எதற்கும் ஒரு அளவு உண்டு. அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்பதை அவர் சிந்திக்க வேண்டும். குருமூர்த்திக்கு நாவடக்கமும், நிதானமும் தேவை. அவர் தடித்த வார்த்தை ஒன்று சொன்னால் நாங்கள் நூறு சொல்லுவோம். எங்களுக்கு எதையும் ஆண்மையுடன் எதிர்கொள்ளும் திராணி உண்டு. இந்த வார்த்தைகளை அவர் திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான எதிர்வினையை அவர் சந்திப்பார்” என்று கண்டனம் தெரிவித்தார்.