தமிழகத்தில் பாஜகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான மாஸ்டர் ப்ளான் தயாராகி விட்டதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் காலூன்றுவதற்காக பாஜக சரியான திசையில் காய்களை நகர்த்தி வருவதாக சிலரும், சாத்தியமில்லாத ஒன்றைக் கனவு காண்பதாக மற்ற சிலரும் மாறுபட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழகம் என்பதே, அண்மைக் காலமாக பாஜகவினர் அடிக்கடி உச்சரிக்கும் அரசியல் முழக்கமாக மாறி இருக்கிறது. அதற்கான வியூகங்களையும் வகுக்கத் தொடங்கி விட்டதற்கான அடையாளமாகவே அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வாக்குச்சாவடி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கான பணிகள் கண்காணிக்கப்படுவதாக பேட்டி ஒன்றில் அமித்ஷா கூறியிருப்பது அந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. அத்தகைய குழுக்களிடம், பிரதமர் மோடி நேரடியாகவே களநிலவரம் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்து, அடுத்த கட்ட நகர்வுக்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான மாஸ்டர் ப்ளான் தயார் என்ற அதிரடி பிரகடனத்தையும் அந்தப் பேட்டியில் வெளியிட்டுள்ளார் அமித்ஷா.
பாஜகவின் இந்த முயற்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும், தமிழகத்தில் கூட்டணித் துணையின்றி அக்கட்சியால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் 50 ஆண்டுகள் திராவிடக்கட்சிகள், தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அவ்வளவு எளிதாக போக்கிவிட முடியாது என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.