டிரெண்டிங்

திருமணமாகி 2 ஆண்டில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : கொந்தளித்த பெற்றோர்..!

webteam

விழுப்புரம் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கொந்தளித்தனர்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்பவர் செல்வகுமார். இவருக்கும் சௌமியா என்ற பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்துவந்தனர். இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதால் செல்வகுமாரின் தாய், சௌமியாவை திட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று அப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சௌமியா இறந்தது தொடர்பாக அவரது தந்தை தனஞ்செழியன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த மரணம் குறித்து தற்போது வரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக சௌமியாவின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சௌமியாவின் மரணம் குறித்து உடனடியாக வருவாய்த்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முன்பு செளமியாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றதால், போராட்டம் கைவிடப்பட்டது.