டிரெண்டிங்

”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுனு நிரூபிச்சட்டலே..” - காதல் மனைவிக்காக கணவன் செய்த மெனக்கெடல்..!

JananiGovindhan

உலகம் முழுக்க பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் அனைவரும் தத்தம் துணைக்காக பல சர்ப்ரைஸ்களை செய்து மகிழ்வித்திருப்பார்கள். ஆனால் இந்த தாய்லாந்தைச் சேர்ந்த கணவன் தன்னுடைய மனைவிக்கு சர்ப்பரைஸ் கொடுக்கும் விதமாக செய்த நிகழ்வுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

அதாவது Vall என்ற அந்த நபர் தன் மனைவி மீதான காதலை நிரூபிக்கும் விதமாக சாக்லேட்கள், பூக்கள் என வழக்கமாக கொடுக்கும் பரிசை விட
மறக்க முடியாத காதலர் தின பரிசாக தங்களுடைய திருமண சான்றிதழையே கையில் டாட்டுவாக குத்தி ஆச்சரயப்பட வைத்திருக்கிறார். அதன்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஃப்ரேமை கொண்ட அந்த திருமண சான்றிதழை அரசாங்கத்தின் முத்திரயைக்கூட விட்டு வைக்காமல் கையின் முன் பக்கத்தில் பச்சைக் குத்தியிருக்கிறார் அந்த கணவர்.

மத்திய தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தில் உள்ள கேங் கோய் பகுதியில் உள்ள டாட்டு ஸ்டுடியோவில் 8 மணிநேரம் செலவழித்து இந்த டாட்டுவை போட்டுக் கொண்டிருக்கிறார் vall. கணவரின் கையில் போடப்பட்டிருந்த டாட்டுவை கண்ட அதிர்ச்சிக்குள்ளான Vall-ன் மனைவி தன் மீதான அவரது காதலை எண்ணி நெகிழ்ந்துப்போயிருக்கிறார் என தாய்லாந்து செய்திகள் குறிப்பிட்டிருக்கின்றன.

vall-க்கு டாட்டு போட்டுவிட்ட அந்த டாட்டு கலைஞர் பேசுகையில், “இதுவரை 8 மணிநேரத்துக்கெல்லாம் நான் டாட்டு போட்டுவிட்டதே இல்லை. முதலில் திருமண சான்றிதழில் இருக்கும் டிசைனை அவரது கையில் அச்சாக வைத்து எங்கேயும் எந்த பிசிறும் தட்டாமல் கவனமாக டாட்டு போட்டிருக்கிறேன்.” என கூறியதாக தாய்லாந்தின் தினசரி பத்திரிகையான காசோத் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதோடு, “வார்த்தைகளை விட செயல்களே பேசும் என்பதற்கு இதுதான் உதாரணம். மனைவி மீதான தன்னுடைய காதலை நிரூபித்து நெகிழ வைத்தவருக்கு பெரிய பாராட்டுகள்” என்றும், “இது நல்ல ஆழமான காதல். அவர்கள் வாழ்நாளுக்கும் மகிழ்ச்சியை இருக்க வேண்டுகிறேன்.” என்றும் நெட்டிசன்கள் தெரிவித்திருக்கிறது.