டிரெண்டிங்

ஒரே செகண்ட்தான்.. கண் இமைப்பதற்குள் கம்பத்தில் மோத வந்த சிறுமி காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி!

JananiGovindhan

அதி முக்கியமான தருணத்தில் சரியான நபர் ஒருவர் இருக்கும் போது அது எந்த அளவுக்கு நல்ல முடிவாக இருக்கும். அதுவும் அந்த நபரால் அல்லது அந்த சமயத்தால் ஒருவரது உயிரே காப்பாற்றப்பட்டிருக்கும் என்றால் அதைவிட பெரிய நல்ல விஷயம் என்னவாக இருந்துவிடக் கூடும்.

இப்படியான சம்பவங்கள் குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன. யார் எவரென்றே தெரியாத நபரால் ஆபத்தான நிகழ்வில் ஈடுபட இருப்பவர் காப்பாற்றப்படுவது குறித்த காணொலிகளை காண்போரை உச்சிக்குளிர வைக்கும்.

அந்த வகையிலான வீடியோ ஒன்றுதான் ட்விட்டர் தளத்தில் தற்போது வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதில், இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்கள் நடைபாதையில் சைக்கிளில் இருந்தபடி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களுடன் கூட இரண்டு சிறுவர்களும் இருக்கிறார்கள்.

பேசிக் கொண்டே இருக்கும் போது எதேர்ச்சையாக இடப்பக்கமாக ஒருவர் பார்க்க, அப்போது சைக்கிளில் வந்த சிறுமி ஒருவர் வேகமாக வந்து நடைபாதையில் இருந்த கான்க்ரீட் கம்பத்தில் முட்டி மோதும் வகையில் வந்திருக்கிறார். இதை உணர்ந்த அந்த கூட்டத்தில் இருந்தவர் ஓடிச் சென்று அந்த சிறுமி கம்பத்தில் முட்டாதபடி தூக்கி காப்பாற்றியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை ladbible என்ற செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதில் கேப்ஷனாக தந்தையின் உணர்திறனுக்கு முன்னே எதுவும் நிகரில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தக்க சமயத்தில் சிறுமியை காப்பாற்றியவர் ஹீரோவுக்கும் மேல் எனவும், மிகப்பெரிய சேவியர் என்றும் கமெண்ட்டில் பாராட்டி வருகிறார்கள்.