விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே இந்தத் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவருக்கு திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது. அதிமுக அமைச்சர்கள் பலரும் ‘சர்கார்’ படம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இப்படத்தை வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர்.
‘சர்கார்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் கிண்டி-கோயம்பேடு சாலையில் ஜாபர்கான்பேட்டையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இங்கும் நடிகர் விஜய் பேனர்களை கிழித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கு முன்பும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, ‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் கமல், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் ‘சர்கார்’ படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.