டிரெண்டிங்

பொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்

பொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்

rajakannan

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றினை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஒரு தும்பியுடைய வாலில் பாராங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்ளோ கொடுமையான‌ விசயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும் சுமைய கட்டி ‌வைப்பது.  இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும். இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.

ஜாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமா இருக்கப்போகிறது. இந்தப் பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது ஒரு குழந்தை இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி போகும். நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு மட்டும்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.

        
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன் தராத இந்தப் புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்தத் திட்டதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இதற்குப் பதிலாக பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் நீங்கள் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை நமதாகும்...!” என அவர் பேசியுள்ளார்.