டிரெண்டிங்

விஜயேந்திரர் செய்தது தவறு: மாஃபா பாண்டியராஜன் சூசகம்

webteam

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறு என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாஃபா பாண்டியராஜன், “உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கூட இருக்கலாம், வேண்டுமேன்று அவமரியாதை என்று நினைக்கவில்லை. ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவர் மரியாதை செய்திருக்க வேண்டும். தேசிய கீதத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் எந்த சூழ்நிலையிலும் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சிறுகுழந்தைகள் கூட மரியாதை கொடுக்கும். அதைபோல் அனைவரும் கொடுக்க வேண்டும். யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தாய்க்கு கொடுக்கும் மரியாதையை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.