டிரெண்டிங்

மதுரை: கோவில் பூசாரி கொடூரமாக வெட்டிக் கொலை... சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை

kaleelrahman

மதுரையில் பிரசித்திபெற்ற பாண்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டிச்சாமி கோவில் முன்பு பூசாரி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரையில் மிகவும் பிரபலமான கோவிலாக பாண்டி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டிச்சாமி சன்னதியின் பூசாரியாக மதுரையை அடுத்த ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா என்பவர் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் இன்று மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே இருந்தபோது வாள் மற்றம் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் இவரை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. உடனடியாக தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் காவல்துறை துணை ஆணையர் சிவபிரசாத் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 பின்னர் குருசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களையும் சேகரித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்பு காதுகுத்து விழாவில் முத்துராஜாவுக்கும் கருப்பாயூரணியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு நடைபெற்று வந்ததாகவும், அதற்கு பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.