பிரதமர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாததையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வேம்பு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேசிய கீத விதிகளின் படி, பிரதமர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.