டிரெண்டிங்

விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு - தூத்துக்குடியில் 80 சதவீத கடைகள் அடைப்பு

PT

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகள் உயிரிழந்ததைக் கண்டித்து தூத்துக்குடியில் இன்று 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடைநடத்தியதாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதியாக சாத்தான்குளம் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் வினாயகமூர்த்தி கூறுகையில், சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்‌. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.