டிரெண்டிங்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : குத்தாலத்தில் நாளை முதல் கடையடைப்பு

webteam

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக குத்தாலத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு கடையடைக்கப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மெயின் ரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வீடு திரும்பிய நிலையில் அவர் உயிரிழந்தார். உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய இருந்த நிலையில், முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.

இதற்கிடையே முதியோரின் இறுதி அஞ்சலியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க குத்தாலம் பகுதியில் நாளை முதல் 5 நாட்களுக்கு கடையடைப்பு செய்யப்போவதாக வணிகர்கர்கள் முடிவெடுத்து அறிவித்துள்ளனர். இதனால் குத்தாலத்தில் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு 1000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படவுள்ளது.