6 வருடங்களுக்கு பின்னர்தான் நான் நடிகை என்பது தெரிந்ததா என பாஜகவில் இணைந்த குஷ்பு, கே.எஸ்.அழகிரிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு சென்னை விமான நிலையத்தில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “பாஜகவில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பாஜகவில் இணைந்ததற்கு எல்.முருகன்தான் காரணம். அவருக்கு நன்றி. தன்னுடைய கட்சியை வலிமைப்படுத்த அதன் சாராம்சங்களை எடுத்துரைத்து புரிய வைக்கிறார் தலைவர் எல்.முருகன்.
ஆனால் இன்னொரு தலைவர் 6 வருடங்களாக அந்த கட்சியில் இருந்த பின்னர், வெறும் நடிகையாகத்தான் பார்த்தோம் என்று சொன்னார். அங்கு இருக்கிறவர்களுக்கும் வெளியில் செல்பவர்களும் மரியாதை கிடையாது. ஏன் வெளியே செல்கிறார்கள் என்று யோசிப்பதற்கு திறமை கிடையாது. 6 வருடங்களுக்கு பின்புதான் நான் நடிகையாக இருக்கிறேன் என்பது தெரிந்துள்ளது. நான் வெளியில் வந்தபிறகு எனக்கு மூளை இருக்கு என்பதை அவர் புரிந்து கொண்டால் நன்றி.
6 வருடமாக அந்த கட்சியில் இருந்து என்னுடைய நேரம், கடினமான உழைப்பை கொடுத்தும், சிந்திக்கிற, மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது. திமுகவில் இருந்து வெளியே வரும்போது நான் குற்றச்சாட்டுகள் வைக்கவில்லை. காங்கிரஸில் இருந்து வெளியே வரும்போதும் நான் குற்றச்சாட்டுகள் வைக்கவில்லை. ஆனால் என்னைப்பற்றி தவறான கருத்துகள் தெரிவிக்கும்போது பதிலடி கொடுத்துதான் ஆக வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை என கே.எஸ்.அழகிரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.