டிரெண்டிங்

“பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை திரும்பப் பெற வேண்டும்” - விஜய்க்கு காங். ஆதரவு

Rasus

‘பிகில்’ திரைப்பட நிகழ்ச்சி நடந்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய விஜய், நிகழ்கால அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். “யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க” எனத் தெரிவித்த விஜய், சுபஸ்ரீ மரணம் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசினார். தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துகளை கூறியதால் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் என தாம்பரம் தனியார் கல்லூரியிடம் உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டது. எந்த அடிப்படையில் திரைப்பட நிகழ்வுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என உயர் கல்வித்துறை கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் ‘பிகில்’ திரைப்பட நிகழ்ச்சி நடந்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுக அரசு தவறாக புரிந்துக்கொண்டிருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியார்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.