டிரெண்டிங்

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு தடை... மேல்மலை நோக்கிச் செல்லும் பயணிகள்

kaleelrahman

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி மற்றும் 12 மைல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருப்பதால், மேல்மலை கிராமங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.


கொரோனா பொது முடக்கத்தால் கொடைக்கானல் நகரில் உள்ள ஏரியில், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது. மேலும் வனப்பகுதிகளில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன்மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகியவை அமைந்துள்ள 12 மைல் சுற்றுலா தலங்களுக்கும், பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. 


இதனால் நகரில் உள்ள பூங்காக்கள் மற்றும் கோக்கர்ஸ் நடைபகுதியை தவிர, வேறு எந்த சுற்றுலா தலங்களையும் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் பொழுதுபோக்குவதற்கு, மேல்மலை கிராமங்களான பூம்பாறை, கூக்கால் மற்றும் மன்னவனூர் கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் புல்வெளிச்சூழல்களை காண சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். 


வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் திறக்கப்படாமல் உள்ள நிலையில், புதிதாக கிராம பகுதிகளில் உள்ள அருவிகள், சோலைகள், பள்ளத்தாக்கு காட்சிகளை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.