டிரெண்டிங்

கருணாநிதி விரைவில் கம்பீர குரலில் பேச வேண்டும்: விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்துக்கு விரைந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் " கலைஞர் விரைவில் உடல் நலம்பெற்று, மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.