கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ, பாஜகவில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் அதனிடம் இல்லை. காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மையை விட சில இடங்களே கூடுதலாக உள்ளது.
அதனால், இந்த ஆட்சியை எப்பொழுதும் தங்கள் கைக்கு வரும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதற்கேற்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் ஊசலாட்ட நிலையிலே இருந்தனர். அத்தோடு, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சங்கர், நாகேஷ் என்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் பெங்களூரிலுள்ள ரிசார்ட் ஒன்றில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி அதனையெல்லாம் எப்படியோ சமாளித்தது.
இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏவான உமேஷ் ஜாதவ் நேற்று முன்தினம் அக்கட்சியிலிருந்து விலகினார். அவர் கலபுரகி மாவட்டத்தின் சின்சோலி தொகுதியைச் சேர்ந்தவர். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முறைப்படி கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய உமேஷ் ஜாதவ் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் முன்னிலை அவர் பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடி கலபுரகி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த இணைப்பு நடைபெற்றது.
உமேஷ் ஜாதவிற்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் கலபுரஜி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்தத் தொகுதியிலிருந்துதான் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்ஜே பலமுறை தேர்வு செய்யப்பட்டார். அதனால், இந்த முறை மல்லிகார்ஜுன கார்க்கேவை எதிர்த்து உமேஷ் ஜாதவ் போட்டியிடவுள்ளார். வட கலபுரஜி மாவட்டத்தின் சின்சோலி தொகுதியிலிருந்து இரண்டு முறை உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.