டிரெண்டிங்

”ஹெலிகாப்டரில் செல்லத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” - கமல்ஹாசன்

Sinekadhara
ஹெலிகாப்டரில் செல்லத்தான் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தங்கவேல், அக்கட்சியின் தலைவர் கமல்ஹானுடன் வந்து தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் வேட்புமனு த்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், பல நற்பணிகளை செய்த தங்கவேலுவை வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளதாகவும், இவரைப் போன்ற நல்லவரின் குரல் சட்ட சபையில் ஒலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மநீம பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் காரணமா என்ற கேள்விக்கு, அரசியல் காரணமாக இருக்கலாம். அவர்கள் பதில் சொல்லட்டும் என பதிலளித்தார்.
மேலும், “எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை. பஸ்சில் சென்று கொண்டிருந்த என்னை மக்கள்தான் ஹெலிகாப்டரில் செல்ல வைத்துள்ளனர். அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. எனது பணத்தில்தான் செல்கிறேன். இதற்காகதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். எனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல இடங்களில் தடங்கல் செய்யப்படுகிறது.
கல்லூரிகளில் மாணவர்களிடம் நான் பேசி விடக்கூடாது என பூடகமாக சொல்லப்பட்டுள்ளது. எங்களது கூட்டங்களுக்கு சுலபமாக அனுமதி கிடைப்பதில்லை. குறுகிய காலத்திற்குள் செல்லத்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன். வேட்பாளர்களுக்கு தோள் கொடுக்க இத்தனை இடங்களுக்கு செல்கிறேன்.
எல்லோரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், எங்களது தேர்தல் அறிக்கை வருவது நல்லதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னதை மற்றவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நல்ல விஷயங்கள் மக்களுக்கு கிடைக்க மநீம முன்னோடியாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக மநீம திகழ மக்கள் உதவ வேண்டும்” எனவும் அவர் கூறினார்.