மதுரையில் டிடிவி தினகரனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கமல்ஹாசனின் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை கட்டபொம்மன் சிலை அருகே ஆர்.கே சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை கண்டித்து நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிடிவி தினகரன் முறைகேடு செய்து ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றிபெற்றாதாக அப்போது கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹாசன், ஆர்.கே நகரில் வெற்றி விலைபேசி வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் டிடிவி தினகரனையும், ஆர்.கே நகர் மக்களையும் விமர்சிக்கும் வகையில் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த தினகரன், கமல்ஹாசன் ஆர்.கே நகர் மக்களை இழிவுபடுத்துவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமல் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.