டிரெண்டிங்

’சர்கார்’ பிரச்னை முடிவுக்கு வந்தது - அமைச்சர் கடம்பூர் ராஜு

’சர்கார்’ பிரச்னை முடிவுக்கு வந்தது - அமைச்சர் கடம்பூர் ராஜு

webteam

மறு தணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்பு குழு உறுதி அளித்ததால் சர்கார் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். தியேட்டர் முன் இருக்கும் விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. 

மேலும் அனுமதி வாங்காமல் பேனர் வைத்ததாக கூறி பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது. அதற்கான செயல்பாடுகள் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிகிறது.  

’சர்கார்’ திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்று மதியம் காட்சிகள் நீக்கப்பட்டு ’சர்கார்’ படம் திரையிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், மறு தணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்பு குழு உறுதி அளித்ததால் ’சர்கார்’ பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குறிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை எனவும் நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.