டிரெண்டிங்

“வேற பெயரே இல்லையா?” -‘சர்கார்’ ஜெயக்குமார் கேள்வி

“வேற பெயரே இல்லையா?” -‘சர்கார்’ ஜெயக்குமார் கேள்வி

webteam

‘சர்கார்’ படத்தில் அந்தக் குறிப்பிட்ட கேரக்டருக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே ‘சர்கார்’ திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவருக்கு திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.

இதையடுத்து அதிமுக அமைச்சர்கள் பலரும் ‘சர்கார்’ படம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே இல்லை எனவும் இதை ஜெயலலிதாவே தன்னிடம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அமைச்சர்கள் படம் பார்த்து விட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை எனவும் நான் படம் பார்த்துவிட்டு,ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 
“எங்களை பொறுத்தவரை கதைகளை பலர் எழுதி இருக்கிறார்கள். அதை குறை சொல்லவில்லை. ஆனால் எதற்காக தேவையில்லாமல் அந்தப் பெயரை வைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கேள்வி” எனக் குறிப்பிட்டார். 

மேலும், எவ்வளவோ பெயர் இருக்கும்போது, ஏன் அந்தப் பெயரை ஏன் வைக்க வேண்டும் எனவும் காழ்ப்புணர்ச்சியுடன் இழிவுபடுத்தும் செயலாகவே அதை பார்க்க முடிகிறது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். 

எனவே மனதை புண்படுத்தும் செயலை எந்த நிலையிலும் ஏற்க முடியாது எனவும் அம்மா இல்லாததால் அவர்களுக்கு குளிர்விட்டு போய் விட்டது எனவும் தெரிவித்தார்.  தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை சிதைத்து, அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.