மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறந்துவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னுரை நிகழ்த்தவுள்ளார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை உரையாற்றவுள்ளார். விழாப்பேருரையை சபாநாயகர் தனபால் நிகழ்த்த உள்ளார். அனைவரையும் வரவேற்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உரையாற்றவுள்ளார். இறுதியில் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சபாநாயகர்கள், பேரவை முன்னாள் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையொட்டி தலைமைச்செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.