முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தாமதமாகியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் செப்டம்பர் 29-ஆம் தேதி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்திற்கான காரணங்கள் குறித்து
விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ்கார்டனில் இருந்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசாரணை இன்று தொடங்காமல் கால தாமதமாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாவும், அதற்கு அவர்களிடம் இருந்து விளக்கம் கிடைத்த பிறகே விசாரணை தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 20 பேர் கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பலரும் எதிர்பார்க்கும் நிலையில் அது மேலும் தாமதமாகியுள்ளது.