சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், கோடநாடு, சிறுதாவூர் பங்களா ஆகியவை இடம்பெறவில்லை.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, 2015-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தார். ஜெயலலிதாவையும், மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு மறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதா இறந்தததால் அவர் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க அவரது சொத்துகளை முடக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் சொந்தமான தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை ஏற்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் ஜெ.வின் சொத்துகள் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு சொத்துகளை பறிமுதல் செய்ய கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்த பறிமுதல் பட்டியலில் போயஸ் தோட்டம், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் போன்ற சொத்துக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.